Showing posts with label டீனேஜ் பிரச்சினை. Show all posts
Showing posts with label டீனேஜ் பிரச்சினை. Show all posts

Sunday, December 27, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 13 - சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்-டாக்டர் ஆ. காட்சன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘அவன்/அவள் ரொம்ப தைரியசாலிப்பா. இதுக்கெல்லாம் கலங்கிட மாட்டாங்க. ஒண்ணும் தப்பா நடக்காது. பார்த்துக்கலாம்’ என்று யாரைப் பற்றியும் தவறாகப் புரிதலை வைத்துக்கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தைரியமானவர்கள்கூடச் சில நேரம் தடுமாறக்கூடும்.


தற்கொலை முயற்சிக்குப் பல நோக்கங்கள் உண்டு. பெரும்பாலும் மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், உலகப் பிரச்சினைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், வீட்டிலுள்ளவர்களை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துவதுண்டு. சிலவேளைகளில் இந்த மிரட்டல் முயற்சிகள் உயிருக்கு ஆபத்தாகவும் முடிவடையும்.



எதிர்பாலினத்தின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதற்கு, தற்கொலை முயற்சியை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்திப் பார்ப்பது உண்டு. சிலர் தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே, ‘எதற்கும் ஒரு தற்கொலை முயற்சியைச் செய்துவிட்டால் பாதுகாப்பு’ என நினைத்து விபரீத முயற்சிகளில் இறங்குவார்கள்.



தற்கொலை ஒரு தியாகமா?
எமில் டர்ஹெய்ம் என்ற சமூக உளவியலாளர் தற்கொலைகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளார். அதில் ஒருவகை சமுதாய நலனுக்காகவோ, மற்றவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலோகூட சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிவது. சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அப்படிப்பட்டவன். தான் தற்கொலைக்கு முயற்சித்ததற்கு, அவன் சொன்ன காரணம் வித்தியாசமானது. பொதுவாகவே அதிகப்படியான சட்டதிட்டங்களைப் பேசும் அவன், வகுப்பில் ஆசிரியர் மொபைல் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளான். பின்பு, இந்தக் காரணத்தை எழுதி வைத்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொண்டால், தனது சாவுக்குப் பின்னாலாவது இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்படாது என்பதுதான் அவனுடைய எண்ணம்.



இதுபோலப் பல இடங்களில் விவாதங்களில் ஈடுபடுவது அவனுக்கு வாடிக்கை. விசாரித்ததில் மனநலப் பாதிப்புகளுக்கான பல அறிகுறிகள் அவனிடம் இருந்தன. இன்னொரு சிறுவன் தான் செத்தாலாவது தனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் விஷம் குடித்துள்ளான். இதுபோன்ற விபரீத முயற்சிகள் வளர்இளம் பருவத்தில் சில நேரம் வரலாம். ஆனால், இந்த முயற்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படு வதில்லை என்பதுதான் உண்மை.



யாருக்குப் பாதிப்பு அதிகம்?
தற்கொலை எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ‘இவ்வளவு தைரியமானவனா இப்படிச் செய்தான்’ என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படிப்பட்டவரையும் சில வேளைகளில் சாய்த்துவிடும். ஆனால், வளர்இளம் பருவத்தினரில் சிலர் எப்போதும் ஆபத்தின் வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள். படிப்பில் மந்தம், தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை, தேர்வுகளில் அடிக்கடி தோல்வி, போதைப்பொருட்கள் பயன்பாடு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சின்ன வயதில் தாயை இழந்தவர்கள், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல்ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.



ஏற்கெனவே குடும்ப நபர்கள் யாரேனும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினர் அதிகப் பாதிப்புக்குள்ளாகலாம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் 5 - ஹைடிராக்சி டிரிப்டமைன் (5-HT ) என்ற ரசாயனத்தைத் தீர்மானிக்கும் மரபணுக் கள் முக்கியப் பங்கு வகிப்பதுடன், பரம்பரையாகப் பாதிக்கும் நிலையும் உள்ளது. ஒருவர் ஒருமுறை தற்கொலை மிரட்டலோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ வெளிப்படுத்தினால், அவர்கள் எப்போதுமே ஆபத்துக்கு உரியவர்கள்தான். அவர்களுடைய செயல்பாடுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.



குணரீதியான மாற்றங்கள்


வளர்இளம் பருவத்தினர் சிலருக்கு வேலையே அவ்வப்போதுத் தற்கொலை மிரட்டல்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாகத்தான் இருக்கும்.
குறிப்பிட்ட குணத்தோடு ஒன்றிப்போன அவர்களிடம், வேறு பல மாற்றங்களும் காணப்படும். யாரிடமும் ஒத்துப்போகாமல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்துவிடுவது, எளிதில் உறவுகளை முறித்துக்கொள்வது, தனக்கு மட்டுமே வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற மனோபாவம், காதல் வலைகளில் மாறிமாறிச் சிக்கிக்கொள்வது, இளம் வயதில் பாலுறவு மற்றும் போதைப் பழக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி தங்கள் கையைப் பிளேடால் கிழித்துக்கொள்வது, சூடுபோட்டுக்கொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஆகிய குணநல மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து காணப்படலாம். இதற்குப் பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு (Borderline Personality Disorder ) என்று பெயர். இவர்களுக்கு மாத்திரைகளோடு மனநல ஆலோசனையும் கட்டாயம் தேவை.


எந்த வகை ஆபத்தானது?
விடலைப் பருவத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் இருக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்தால், அவர் செய்த முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கலாம். யாரும் இல்லாத, காப்பாற்ற வழியில்லாத இடங்களைத் தேர்வு செய்வது, ரயில் முன்னால் அல்லது மாடியிலிருந்து விழுவது, கடிதம் எழுதிவைப்பது, விஷம் அருந்தியதைக் கடைசிவரைக்கும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது போன்றவை தீவிரமான தற்கொலை எண்ணங்களின் வெளிப்பாடு.



ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்க மாத்திரை கேட்டிருக்கிறான். அவர்கள் இரண்டு மாத்திரைக்கு மேல் கொடுக்க மறுத்ததால், பல கடைகளில் இரண்டிரண்டு மாத்திரைகளாக, பல நாட்களாகச் சேகரித்துவைத்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இத்தகைய நபர்கள் கண்டிப்பாகத் தீவிர மனநல ஆலோசனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இவர்கள் மனநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பு அதிகம்.


(அடுத்த முறை: நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்) 
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் 
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

தஹிந்து

Wednesday, October 28, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 6 - புதுப்புது சந்தேகங்கள் முளைக்கும் காலம்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே உருவாகிவிடுகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது' என்று உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இப்படிச் சொன்ன தற்காகப் பல எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.
அவருடைய கூற்றுப்படி பாலியல் உணர்வை ஒரு விதைக்குள் இருக்கும் மரத்தோடு ஒப்பிடலாம். ஊன்றப் பட்டதிலிருந்து மண்ணுக்குள்ளிருந்து வெளியே வரும்வரை வெளியில் தெரியாமல் இருக்கும். அந்த விதை செடியாக வளரும் பருவம் போலத்தான், விடலைப் பருவமும். பதிமூன்று வயதில்தான் பாலியல் உணர்வுகள் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பிக்கும். சில வருடங்களில் அது தீவிரமடையும், பரிசோதித்துப் பார்க்க முயற்சி செய்யும்.
பாலியல் தேடல்
இந்த ஆர்வத்தில்தான் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது?’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா?’ என்றும் ஏடாகூடமான கேள்விகளைச் சில வளர் இளம்பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், அவர்களுடைய தேடல் ஆரம்பித்துவிடும்.
‘அய்யய்யோ... இந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுதே!' ன்று பெற் றோர் கவலைப்படத் தேவையில்லை. மனிதனின் முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. அந்த வகையில் உணவு, தூக்கத்துக்கு அடுத்துச் செக்ஸுக்கு மூன்றாவது இடம். அதனால்தான் பெரும்பாலான விடலைப் பருவத்தினர் தங்கள் ரகசியக் கேள்விகளுக்கான விடைகளை ராத்திரி 11 மணிக்கு மேல் டிவி சேனல்களிலோ, வலைதளங்களிலோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பாலின ஈர்ப்பு
கிட்டத்தட்ட 12 வயதுவரை பெண் குழந்தைகளுடன் உட்கார விரும்பாத ஆண் குழந்தைகள் ‘பதின்பருவ' வயதில் பெண் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார ஆசைப்படுவார்கள். அதேபோல, ஆண் குழந்தைகளைப் போட்டியாளர்களாகப் பாவிக்கும் பெண் குழந்தைகள், பதின் பருவத்தில் ஆண் குழந்தைகளின் மீது கரிசனம் காட்டத் தொடங்குவார்கள்.
வளர் இளம்பருவத்தில் எதிர்பாலினத்தவருடன் பழக வேண்டும், நட்புகொள்ள வேண்டும் என்ற ஆசை அரும்புவிட ஆரம்பிக்கும். இதுவும் சமூகப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஒருவகையில் உதவி செய்யும், இயற்கையின் உந்துதல்தான். இந்த ஈர்ப்பு, வளர் இளம்பருவத்தினர் மத்தி யில் காதலாக மாறவும் வாய்ப்புண்டு.
ஹார்மோன் விளையாட்டு
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம் ஏற்படும். பாலியல் மீதான எதிர்பார்ப்பு கூடுவதற்கு ஏற்ப, ஆணுறுப்பின் வளர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது நண்பர்களின் ஆணுறுப்பின் அளவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எட்டிப்பார்க்கவும் கூச்சப்பட மாட்டார்கள்.
தங்கள் ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று தோன்றுகிற பட்சத்தில், மொத்தப் பாலியல் வாழ்க்கையுமே பாழாகிப்போனது போன்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொள்ளும். போதாக்குறைக்குப் புத்தகங்களிலும் வலைதளங்களிலும் வரும் ‘இந்தக் கிரீமை உபயோகித்தால் பல சென்டிமீட்டர் அளவுக்குக் கூட்டலாம்’ என்பது போன்ற விளம்பரங்கள் வேறு, அவர்களை அதிகப் பதற்றமடைய வைக்கும். ஆனால், ஆணுறுப்பின் அளவுக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் மருத்துவரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.
மார்பக வளர்ச்சி
ஆண்களுக்கு ஆணுறுப்பைப்போல, பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. தாயிடம் இருக்கும் நல்ல உறவு, அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.
மாதவிடாய் குறித்த பயம், அது வரும் நாட்களில் உடல், மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆலோசனை பெறுவது மிக அவசியம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஐந்து நாட்கள் அதிகப் பதற்றம், தூக்கமின்மை, மார்பு கனமாகத் தோன்றுதல், எரிச்சல்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு premenstrual syndrome என்று பெயர். இதைச் சமாளிக்க ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வுடன் சிலநேரம் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படலாம்.
(அடுத்த முறை: கலக்கம் தரும் திடீர் கனவு)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com


தஹிந்து