
தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, விமர்சகர்களாலும்
மக்களாலும் 10 படங்கள் நிராகரிப்பட்டது. மணிரத்னம், அமீர், பாரதிராஜா,
செல்வராகவன், ராஜேஷ் போன்ற முக்கியமான இயக்குநர்களே 2013ல் சறுக்கியது தான்
அதிர்ச்சி.
'கடல்', 'ஆதிபகவன்', 'அன்னக்கொடி', 'நாகராஜ சோழன்', 'அலெக்ஸ் பாண்டியன்',
'மரியான்', 'தலைவா', 'நய்யாண்டி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'இரண்டாம்
உலகம்' ஆகிய படங்கள் 2013ல் படுதோல்வியை சந்தித்தன.
மக்களை மூழ்கடித்த 'கடல்'
'நெஞ்சுக்குள்ளே' பாடல் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டினார்
மணிரத்னம். படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டோரின் லுக்கை போஸ்டராக வைத்து
INTRODUCING GAUTAM KARTHIK, INTRODUCING THULASI என ஒவ்வொன்றாக
வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடையே அமோக
வரவேற்பைப் பெற்றது.
மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கார்த்திக்கின் மகன் ஹீரோ,
ராதாவின் மகள் ஹீரோயின், மீண்டும் அரவிந்த்சாமி, வில்லனாக அர்ஜுன் என
படத்தின் முதல் காட்சிக்கு ஞாயிற்று கிழமை மாலை மெரினாவில் இருக்கும்
கூட்டம் போல அலை மோதியது. தியேட்டருக்குள் வந்த அனைவரையும் மூழ்கடித்து,
'இனிமேல் என்னை நம்பி வருவியா' என்று திணறடித்தார். முத்து கிடைக்கும் என
நம்பி வந்தவர்களுக்கு கிளிஞ்சல்கள் அளித்து அனுப்பினார்கள்.
சுனாமி வந்த அடுத்த நாள் மெரினா பீச் எப்படி இருந்ததோ அப்படி தான்
படத்திற்கு இரண்டாம் நாள் கூட்டம் இருந்தது. அந்தளவிற்கு மக்களால்
முற்றிலும் நிராகரிப்பட்டது. இப்படத்தினை வாங்கி பாதிப்படைந்தது ஜெமினி
நிறுவனம். அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்னும் அவர்கள்
மீளவில்லை.

'பருத்தி வீரன்' இயக்குநரா 'ஆதிபகவனை இயக்கினார்?
இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் என அனைத்து முன்னணி கலைஞர்களும்
இணைந்து ரசிர்களை ஏமாற்றிய படம் 'ஆதிபகவன்'. நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு
நடைபெற்றது. படத்தின் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் படத்திற்கு
எதிர்பார்ப்பை கூட்டினார்கள். பத்தாக்குறைக்கு பவளக்கொடியாய் நீதுசந்திரா
வேறு அவ்வப்போது பேட்டிகளில் ‘ஆதிபகவன்’ படம் குறித்து சிலாகித்தார்.
படத்தின் போஸ்டர்களில் கூட ’வில்லன் ’ஜெயம் ரவியின் படத்தை வெளியிடவில்லை.
2007ல் 'பருத்தி வீரன்' இயக்கிய அமீர் இயக்கத்தில் 6 ஆண்டுகள் கழித்து
வெளிவந்தது 'ஆதிபகவன்'. படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே கேட்ட கேள்வி
'நிஜமாவே அமீர் இயக்கிய படமா இது?' என்பது தான்.
இமயத்தை கொடியில் தொங்க வைத்த 'அன்னக்கொடி'
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'அன்னக்கொடி'. தேனியில் படப்பூஜை
போடப்பட்ட போது அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு நடைபெற்ற
பிரச்சினையால் கார்த்திகா, மனோஜ் நடிப்பில் வெளியானது.
மாமனாரின் காமவெறி, ஆண்மையற்ற கணவன் என சொதப்பலான கதையை 'அன்னக்கொடி'யாக
எடுத்திருந்தார். நாம எதை படமாக எடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்
என்று பாரதிராஜா நினைத்து விட்டார் போல.
'அன்னக்கொடி' வெளியான முதல் நாள் மாலையே கொடியில் ஒரு துணி கூட இல்லை
. தப்பாக அல்வா கிண்டிய மணிவண்ணன் - சத்யராஜ்
மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற
'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது 'நாகராஜ சோழன்'.
'அமைதிப்படை' படத்தில் இருந்த சுவாரசியமான காட்சிகள் எதுவுமே 'நாகராஜ
சோழன்' படத்தில் இல்லாதது பெரிய குறை. ‘அமைதிப்படை’யில் கிண்டிய அல்வாவை
மறுபடி கிளறி மக்களுக்கு கொடுத்தார்கள்.. பழைய அல்வா அல்லவா..
புளித்துவிட்டது.
விளம்பரத்தை நம்பி களமிறங்கிய அலெக்ஸ் பாண்டியன்
பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட
வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை
வெளியிட்டது.
கார்த்தி, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். அரிவாளால் சுமோ
டயரை வெட்டுவது, சுமோ வானுயர்விற்கு பறப்பது, டிரெய்னின் மீது வில்லன்
ஆட்கள் துரத்துவது, சந்தானத்தின் டபுள் மீனிங் வசனங்கள் என படம் பார்க்கும்
அனைவரையும் ரத்தக்களரியாக்கி ஒட வைத்தது.
பாட்டெல்லாம் ஹிட்டு.. படம்..? கடலோடு கூட்டு சேர்ந்த 'மரியான்'
ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்'
வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின்
நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு'
என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன
ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட
அனைத்து அம்சங்களும் இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை அமைப்பால்
தோல்வியடைந்தது மரியான்.
2013ல் ஆப்பிள், ஐ-டியூன்ஸ் தளத்தில் சிறந்த தமிழ் இசை ஆல்பமாக தேர்வானது 'மரியான்'
நமக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் என்று விஜய் உணர்ந்த 'தலைவா'
இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம். 'நாயகன்' கதையை
கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து, 'தலைவா' என்று படமாக்கினார்கள். விஜய்யின்
போஸ்டர்கள் வெளியான போது, அரசியல் சார்ந்த படம் என்று பேச்சு நிலவியது.
'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று
பெரும் சர்ச்சையில் கிளம்பியது. படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு
பாதுகாப்பு அளிக்க போதிய போலீசார் இல்லை என்று தமிழக அரசு கூறியது.
இறுதியாக தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுதது, படத்தினை வெளியிட
தமிழக அரசு உதவிட வேண்டும் என்று விஜய் வீடியோ மூலம் பேசியது உள்ளிட்ட
பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு தான் ‘தலைவா’ வெளியானது.
படம் போதிய வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை. தயாரிப்பாளருக்கு
மட்டுமன்றி, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு
நஷ்டத்தினை ஏற்படுத்தியது 'தலைவா'
தனுஷை பதற வைத்த 'நய்யாண்டி'
'வாகை சூட வா' இயக்குநர் சற்குணம் - தனுஷ் - நஸ்ரியா இணைப்பில் வெளியான
படம் 'நய்யாண்டி'. நஸ்ரியாவின் சர்ச்சையால் படம் பரபரப்பானது. தேசிய விருது
இயக்குநர் + தேசிய விருது நடிகர் கூட்டணி என்று நம்பி படத்திற்கு
சென்றவர்களை நையாண்டி செய்தது நய்யாண்டி’
“சற்குணம் - தனுஷிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்று ரசிகர்கள் நொந்தார்கள்.
இப்படத்தின் உச்சப்பட்ச காமெடியாக, ஓடாததால், படத்தை திரையரங்குகளிலிருந்து
எடுத்த பிறகு, மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர் எனது கதையை திருடி படமாக
எடுத்து விட்டார்கள் என்று போலீசில் புகார் அளித்தார்!
கோவம் வர்ற மாதிரி காமெடி செய்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'
ராஜேஷ் - கார்த்தி - சந்தானம் இணைப்பில் வெளியான படம் 'ஆல் இன் ஆல்
அழகுராஜா'. தனது காமெடி படங்கள் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை
உருவாக்கியவர் ராஜேஷ். அவரே அந்த வட்டத்தை சுருக்கிக் கொண்ட படம் 'ஆல் இன்
ஆல் அழகுராஜா'.
காமெடி என்கிற பெயரில் சந்தானத்தின் பேச்சு, 3 மணி நேர படம் என பல வகையில் பார்ப்பவர்களை இடைவேளையின் போதே கடுப்பேற்றியது படம்.
இருண்ட 'இரண்டாம் உலகம்'
செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்'.
ஆர்யா, அனுஷ்கா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். படம் தயாரிப்பிலேயே
பல நாட்கள் இருந்ததால், ஹாரிஸ் ஜெயராஜ் மற்ற படங்களில் பிஸியாக, இறுதியில்
அனிருத் பின்னணி இசையில் வெளியானது ‘இரண்டாம் உலகம்’.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, சொதப்பலான திரைக்கதையால் ஏமாற்றிய படம்.
கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டிய அக்கறையை திரைக்கதை அமைப்பில்
காட்டியிருக்கலாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒரே
நேரத்தில் இரண்டு படங்களுக்கு பின்னணி இசையமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால், பிரம்மாண்ட படம் எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் தான் இந்த
படத்திற்கு இசையமைத்தேன்" என்று பொறி வைத்து பேசி வியக்க வைத்தார்.
படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் இரண்டாம் உலகத்திற்கு அழைத்துச்
செல்கிறேன் பேர்வழி என்று முட்டுச் சந்துக்குள் தான் கூட்டிச் சென்றார்
செல்வராகவன். மூன்றாம் உலகம் விரைவில் என படத்தை முடித்து, "அய்யோ...
மறுபடியும் முதல்ல இருந்தா..." என்று கேட்க வைத்தார்.
thanx - the hindu
0 comments:
Post a Comment